வராஹி மாலை – பாடல் வரிகள்

சக்தி வாய்ந்த வாராகி மாலை - பாடல் வரிகள்

இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும் குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம் திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.

தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து ஈராறிதழிட்டு ரீங்காரம் உள்ளிட் டது நடுவே ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால் வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.

மெய்ச்சிறந்தாற் பணியார் மனம் காயம் மிகவெகுண்டு கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்து வாய்கடித்துப் பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே.

படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில் நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.

நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக் கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட் டிடும்பாராக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும் தொடும்கார் மனோன்மணி வாராஹி நீலி தொழில் இதுவே.

வேய்க்குலம் அன்னதிந்தோனால் வாராஹிதன் மெய்யன்பரை நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தல நொய்தழித்துப் பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே.

நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால் வீசப் படுவர் வினையும் படுவரிம் மேதினியோர் ஏசப் படுவர் இழுக்கும் படுவரென ஏழை நெஞ்சே வாசப் புதுமலத் த்னாள் வாராஹியை வாழ்த்திலரே.

வாலை புவனை திரிபுரை மூன்றுமிவ் வையகத்திற் காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.

வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச சிரித்துப் புரமெரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள் கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற் பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே.

பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற் பூப்பட்டதும் பொறிப்பட்டதோ? நின்னை யேபுகழ்ந்து கூப்பிட்ட துன்செவி கேட்கில்லையோ? அண்ட கோளமட்டும் தீப்பட்ட தோ?பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே

எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர் அங்கம் பிளந்திட விண்மன் கிழிந்திட ஆர்த்தெழுந்து பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச் சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.

சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக் குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவி நின்றே இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே.

நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக் கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.

மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர் அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம் கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹின் மெய்த் தெய்வமே.

ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியும் மலர்க் கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கணெதிரே வையம் துதிக்க வாராஹி மலர்க்கொடியே.

தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள் மாளும் படிக்கு வரம்தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர் கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும் வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

வருந்துணை என்று வாராஹி என்றன்னையை வாழ்த்தி நிதம் பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால் உடலைப் பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும் விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.

வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலம் கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச் சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும் மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.

பாடகச் சீறடிப் பஞ்சை அன்பர் பகைஞர்தமை ஓடவிட் டே கை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம் கோடகத் திட்டு வடித்தெருத் தூற்றிக் குடிக்கும் எங்கள் ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள் எங்கள் அம்பிகையே.

தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ் சேமக் கழலும் திதிக்கவந்தோர்க்கு ஜெகம் அதனில் வாமக் கரள் களத்தம்மை ஆதி வாராஹிவந்து தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.

ஆராகிலும் நமக்கேவினை ச்ய்யின் அவருடலும் கூராகும் வாளுக் கிரைஇடுவாள் கொன்றை வேணிஅரன் சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள் வாராஹி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே.

தரிப்பாள் கலப்பை என் அம்மை வாராஹிஎன் சத்துருவைப் பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந்த் ததலை நெரிப்பாள் தலைமண்டை மூளையத் தின்றுபின் நெட்டுடலை உரிப்பாள் படுக்க விரிப்பாள்கக்காக உலர்த்துவளே.

ஊரா கிலுமுடன் நாடா கிலும் அவர்க் குற்றவரோடு பாரா கிலும் நமக் காற்றுவரோ? அடலாழி உண்டு காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉண்டே.

உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம் வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள் இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும் விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.

தஞ்சம்உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல் வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்டு அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.

அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால் கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித் தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர் நிலைபெற்ற நேமிப் படையாள் தனை நினை யாதவரே.

சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே அந்திபகல் உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய் நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப் புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹி நற் பொற்கொடியே.

பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்துமெனது இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை நெருப்புக் குவாலெனக் கொல்வாய் வாராஹி என் நிர்க்குணியே.

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து நீறிட்டவர்க்கு வினை வருமோ? நின் அடியவர்பால் மாறிட்டவர்தமை வாள் ஆயுதம்கொண்டு வாட்டி இரு கூறிட் டெறிய வருவாய் வாராஹி குல தெய்வமே.

நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான் அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடியார்க்கு முன்னே ஸரியாக நின்று தருக்கம் செய் மூடர் தலையை வெட்டி எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே.

வீற்றிருப்பான் நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம் பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில் கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே.

சிவஞான போதகி செங்கைக் கபாலி தகம்பரி நல் தவம் ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே.